
சிலநேரங்களில் கிடைக்கும் எதிர்பாராத பரிசுகள், வாழ்த்துக்கள் கொடுக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை,நேற்று அதுபோல் கிடைத்த தமிழ்மண 2009 நகைச்சுவை, கார்ட்டூன் பிரிவின் முதல் பரிசு விருதும் அதன்பிறகுபோன் செய்தும் மெயில் அனுப்பியும் பின்னூட்டமிட்டும் வாழ்த்திய நண்பர்களால் மிகவும் உற்சாகமாக இருந்தேன்.
எவ்விதமான சச்சரவும் இன்றி தமிழ்மணம் ஒருநாள் கூட தாமதமின்றி இந்த போட்டியினை நடத்தி முடித்திருக்கிறார்கள், சரியான திட்டமிடல்களோடு பக்காவாக நடத்திமுடித்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும், தொழில் நுட்ப குழுவினருக்கும் நன்றிகள் சொல்லி அதை ஒரு வார்த்தையில் அடக்கிவிட முடியாது.
நான் பரிந்துரை செய்தது ஒரே ஒரு பிரிவான "நகைச்சுவை, கார்ட்டூன்" பிரிவு அதில் செந்தழல் ரவியின் வெண்ணைபோல் ஒருவன், கார்க்கியின் புட்டி ஹீரோ ஏழு, பினாத்தலின் திருமங்கலம் மில்லியனர் இவர்களை எல்லாம் பார்த்ததும் ஆஹா இந்த முறை வடை கிடைக்காது போலவே என்று மனசில் பயம் இருந்தது. இருந்தும் ஓட்டு மட்டும் யாரிடமும்கேட்க கூடாது ஸ்டேட்டஸ் மெசேஜ் கூட போடக்கூடாது யாருடையது பிடித்திருக்கிறதோ அதுக்கு ஓட்டு போடட்டும் நண்பர்களுக்கு எதுக்கு தொல்லைகொடுக்கனும் என்று விட்டுவிட்டேன். தோற்றாலும் யாரிடம் தோற்க போகிறோம் நம் நண்பர்களிடம் தானே இதில் என்ன இருக்கு என்று நினைத்தேன்.ஆனால் எப்பொழுதும் போல் நான் நினைப்பதுக்கு எதிராகவே நடப்பது போல் இதிலும் வெற்றிப்பெற்று முதல் பரிசு கிடைத்துவிட்டது. இருந்தும் எனக்கு பிடித்திருந்த செந்தழல் ரவி, கார்க்கி, பினாத்தல் சுரேஷ் இவர்களோடு இந்த விருதை பகிர்ந்துக்கிறேன். இதற்கு காரணமாக இருந்த சக பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.
அமீரகத்தில் இருந்து வெற்றி பெற்ற நண்பர்கள் ஆதவன், இஸ்மத் ஆகியோருக்கும் மற்ற பிரிவில் வெற்றிப்பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.


