Sunday, August 30, 2009

வீட்டுல விசேசமுங்கோ!!!

(கலை கண்ணை மூடிய கேப்பில் கஞ்சி கப்பை ஆட்டைய போட்ட ஆதவன்)
வீட்டில் சின்ன சின்னதாய் விழாக்கள் நடைபெறும் பொழுது வீடு எப்படி உறவினர்களாலும் நண்பர்களாலும் களைகட்டுமோ அப்படி இருந்தது கடந்த வெள்ளி கிழமை மாலை, இடம் ஆசிப் அண்ணாச்சியின் வீடு. வழக்கமான பதிவர் சந்திப்பு போல் இல்லாமல் வீட்டில் நடந்த சின்ன விழா போல் இருந்தது.

நாம எல்லாம் ஓசி சாப்பாடுன்னாலே காலையில் இருந்து வயிறை காலியா வெச்சுக்கிட்டு போய் செம கட்டு கட்டும் ஆளுங்க, பிரியாணி விருந்துன்னா கேட்கவா வேண்டும்? 7 மணி இஃப்தார் பார்ட்டிக்கு முதல் ஆளாக நானும் நண்பர் சிவராமனும் போய் துண்டை போட்டுக்கிட்டோம். அண்ணாச்சி ஏதும் ஹெல் செய்யனுமா என்று கேட்பது மட்டும் தான் என் வேலை என்பதை அண்ணாச்சி தெரிஞ்சுக்கும் வரை எல்லாம் ஒழுங்காகதான் போய் கொண்டு இருந்தது, அவர் சரியாக இரண்டு மணி நேரத்தில் டேய் இவன் இப்படியே எல்லோரிடமும் கேட்டுக்கிட்டு ஒருவேளையும் செய்யாம சுத்தி சுத்தி வருகிறான் டா என்று அவர் கண்டு பிடிச்சதும் இனி பப்பு வேகாதுன்னு ஆரஞ்சு உறிக்கும் வேலைக்கு போய்விட்டேன்.

நண்பர்கள் ஒவ்வொருவராக வர வர ஆள் ஆளுக்கு வேலைகளை அண்ணாச்சி பிரிச்சுக்கொடுத்துக்கிட்டு இருந்தார், பம்மல் கே சம்மந்தத்தில் கமல் டயலாக் ஒன்னு சொல்லுவார் அதுதான் நினைவுக்கு வந்துச்சு, ஆண் சிங்கம் ஒன்லி டிஸ்ரிபியூட் வேலை மட்டும் செய்யும் பெண் சிங்கம் தான் வேட்டைக்கு போகும் என்று, இங்கு பெண் சிங்கங்களுக்கு பதில் சின்ன சின்ன பூனைகள். அண்ணாச்சி சோக்கா ஒரு வெள்ளை கலர் ஜிப்பாவை எடுத்து மாட்டிக்கிட்டார், கடைசி வரை அதில் ஒரு சின்ன அழுக்கு கூட ஆகவில்லை என்றால் எப்படி வேலை பார்த்து இருப்பார் பாருங்க!

கீழை ராசா வீடு எங்கன்னு கேட்க போன் செஞ்சார் லொக்கேசன் சொல்லிட்டு வாங்க என்றேன், திரும்ப போன் செஞ்சு எங்க வரனும் என்றார், திரும்ப இடம் எங்கன்னு கேட்டார் அதையே சொன்னேன், என்ன டா இவரு சும்மா போன் செஞ்சுக்கிட்டே இருக்காருன்னு ஹல்லோ பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு பில்டிங் இருக்கு அந்த பில்டிங் தான் என்று வீட்டு நம்பரையும் சொன்னேன், திரும்ப போன் செஞ்சு அல்லோ எப்படி வருவதுன்னு தெரியல கொஞ்சம் ஒழுங்கா சொல்லு, பிரியாணி வேற சூடு ஆறுதுன்னு சொன்னார், அட பாவி பிரியாணி உங்க (ஒத்தை ஆளா ரெண்டு லிட்டர் ஜூஸ் குடிச்சுட்டு மீதி கொஞ்சமாக வைத்திருக்கும் சுபைர்)கூடதான் வருதுன்னு முன்னாடியே சொல்லக்கூடாதான்னு மனசுல நினைச்சுக்கிட்டு அங்கயே நில்லுங்க நான் வருகிறேன் என்று ஓடி போய் அவரை அழைத்து வர சென்றேன், அங்க போன பிறகுதான் தெரிஞ்சுது கீழை ராசா (மனசு) மாதிரியே பிரியாணி பாத்திரமும் பெருசுன்னு, அப்பதான் நம்ம ஆதவன், சென்ஷி, கோபி எல்லாம் வர, ஜிம் பாடியான ஆதவனிடம் செல்லம்

பிரியாணிய தூக்கனும் வான்னு சொல்லி கூட போய் ஒழுங்கா தூக்கிக்கிட்டு வராங்களான்னு மேல் பார்வை பார்த்துக்கிட்டே வந்தேன். இது பொருக்காத கீழை ராசா குசும்பா நோம்பு கஞ்சி ஒரு பாத்திரத்தில் இருக்கு அதை தூக்கிட்டு வான்னு சொல்லிட்டார், வேற வழி வேலை செஞ்சே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்! நானும் கவிஞர் சிம்மபாரதியும் கஞ்சி பாத்திரத்தை தூக்கிட்டு வந்தோம், சிம்ம பாரதியோடு வரும் பொழுது பிரண்ட்ஸ் படத்தில் கடிகாரம் கீழே விழும் சீன் அடிக்கடி நினைவுக்கு வந்து இம்சை செய்தது. அவர்களுடன் மலேசியா புகழ் இஸ்மத் அண்ணனும் வந்தார்.

அண்ணாச்சியின் சரியான வழிகாட்டுதலின் விளைவாக 20 நிமிடத்தில் வரவேண்டிய இடத்துக்கு இரண்டு மணி நேரம் சுத்தி ஒருவழியாக வந்து சேர்ந்தார்கள் ஆசாத், சுபையர், தினேஷ். நோம்பு முடிக்கும் நேரம் வரை பொறுமை இல்லாமல் ஏதோ ஐஸ்கிரீம் மாதிரி ஒரு கப்பில் இருந்ததை பார்த்து நைசா அதை ஆட்டைய போடும் பொழுது தம்பி கோபி பார்த்துட்டான் சரி வா அப்படியே வெளியில் நைசா போய்விடாலாம் என்று இருவரும் வெளியில் போவதை பார்த்த ஆதவன் பின்னாடியே வர நான் வழக்கம் போல் முதல் பங்கை கோபிக்கு கொடுத்து டெஸ்ட் செஞ்சேன் கோபி பிடிக்கவில்லை என்றான், சரி நாம சாப்பிட்டு பார்க்கலாம் என்று டேஸ்ட் செஞ்சா எனக்கும் பிடிக்கவில்லை கதவை திறந்து வெளியில் வந்த ஆதவனிடம் இந்தா உனக்குதான் சாப்பிடு என்று சொல்லி கப்பை அவன் கையில் கொடுத்தேன், சரியான சமயத்தில் அண்ணாச்சி தேடிக்கிட்டு வெளியில் வந்துட்டார் இங்க என்னாடா செய்யுறீங்கன்னு, பாருங்க அண்ணாச்சி ஒரு கப் ஐஸ்கிரீமை தனியா சாப்பிடுறான் ஆதவன் என்று போட்டு கொடுத்துட்டு வந்துட்டேன். நிகழ்சி முடியும் வரை ஒரு கப் ஐஸ்கிரீமை தனியா திருடி தின்ன ஆதவன் என்ற பெயர் வரும் படியும் பார்த்துக்கிட்டேன்.



கடைசி நேரம் வரை சுந்தருக்காக காத்துக்கொண்டு இருந்தோம் ஏன் என்றால் அவர் எடுத்து வருகிறேன் என்று சொன்ன வடைக்காக என்று சொல்லி தெரியவேண்டியது இல்லை, அவர் வந்ததும் ஆஹா வடை வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் ஓடி போய் அவரை வரவேற்க சென்றேன், அந்த சைக்கிள் கேப்பில் நான் தனியாக எதில் அதிகம் இருக்கும் என்று ஸ்பெசலாக பார்த்து பார்த்து உட்காந்திருந்த இடத்தில் வேறு ஒரு நண்பர் உட்கார்ந்துவிட்டார்,
சுந்தரும் வடை இல்லை வேறு ப்ரூட் மிக்ஸ் + ஐஸ்கிரீம் தான் என்றார் ஆஹா வடை போச்சேன்னு சொல்லுவது சரியாக பொருந்தியது. இந்தமுறை வடை திருட முடியாமல் போன வருத்தத்தில் மிகவும் சோகமே உருவாக கலை இருந்தார்.

பின் தட்டு நிறைய பழம், சமோசா, கட்லெட்,என்று என்ன என்னமோ வெச்சுட்டு வெடி வெடிச்ச பிறகுதான் சாப்பிடனும் என்று கட்டளை வேறு போட்டுவிட்டார் சுல்தான் பாய், எவ்வளோ கஷ்டமான விசயம் இது. ஒரு வழியா வெடி வெடிச்சதும் சாப்பிட போகும் நேரம் லேட்டாக வந்த லியோவுக்கு பிளேட் இல்லாததால் வாங்க ஷேர் செஞ்சு சாப்பிடலாம் என்று ரொம்ப பெருந்தன்மையா சொல்லிட்டு உள்ளுக்குள் இன்னைக்கு நமக்கு நேரம் சரில்லை போல என்று நான் பட்ட கஷ்டம் எனக்குதான் தெரியும்.

லொடுக்கும் அவர் குடும்பத்தோடு வந்தார், படகும் அவர்களுடைய கணவரும் குடும்ப சகிதமாக ஆஜர் ஆனார்கள்.

எல்லாம் முடிஞ்சு ஷார்ஜாவில் இருந்து வீட்டுக்கு கொண்டு வந்து விட்டனர் நண்பனும் முத்துகுமரனும்.

(சின்ன கப்பில் ரெண்டே ரெண்டு ஸ்பூன் பிரியாணி, நான் ரொம்ப கொஞ்சமாக சாப்பிடுவதுக்கு சாட்சி)
சில லெக் பீஸ்கள்:

1) அண்ணாச்சி ஒரு வெஜ்டெல்புல் சாலடை கையில் வெச்சுக்கிட்டு குசும்பா கொஞ்சாமாச்சும் வெச்சுக்கடா என்று எவ்வளோ கெஞ்சி பார்த்தார் அவரிடம் ஸ்ரிக்டா அண்ணாச்சி நான் Pure Non veg என்னை மாத்த முயற்சிக்காதீங்கன்னு சொன்ன பிறகுதான் போனார்.


2) செந்திவேலன் சில பிரபலங்கள் விமர்சனம் மோசமாக எழுதுவதால் பலர் படம் பார்க்காமல் போய்விடுகிறார்கள் கொஞ்சம் கவனமாக எழுதனும் என்றார்

3) சுபைர் வெண்ணிலா கபடி குழுவில் வரும் புரோட்டா காமெடி போல் என் தட்டில் பிரியாணி வைக்கவே இல்ல இது போங்காட்டம் திரும்ப முதலில் இருந்து எல்லாத்தையும் வையுங்க என்று சண்டை போட்டுக்கிட்டு இருந்தார்.

4) கலை கடமை வீரராக பார்சலும் எடுத்து சென்றது அவரின் கடமைக்கு சிறந்த உதாரணமாக இருந்தது.

5) ராஜா கமால் எழுதிய பூத்துமகிழும் பூக்கள் புத்தக வெளீயிடு நடந்தது, சென்ஷி புத்தகத்தை பற்றி யாரும் உடனே கருத்து ஏதும் சொன்னால் நல்லா இருக்கும் என்றார், அட்டை அழகாக இருக்கிறது புத்தகம் வாசமாக இருக்கிறது என்று வேண்டும் என்றால் உடனடியாக சொல்லலாம் என்றது சைலண்ட் ஆகிவிட்டார்.

6) செந்தில் நாதனுக்காக பதிவை மட்டும் பார்த்துவிட்டு பணம் அனுப்பிய முகம் தெரியாத நண்பர்களை பற்றி அண்ணாச்சி சொன்னார் மிகவும் சந்தோசமாக இருந்தது.

7) பினாத்தல் சுரேஷ் கதை போட்டி வைக்கனும் என்றார் நீங்கதான் நடுவர் நான் 10 கதை எழுதுவேன் என்றதும் அதன் பிறகு போட்டி பற்றி பேசவே இல்லை!



Monday, August 24, 2009

சென்னை அது ஒரு ஊரு!

என்னிடம் பேரை கேட்டாலே டரியள் ஆகும் ஊர் எதுன்னு கேட்டா கொஞ்சமும் யோசிக்காமல் வரும் பெயர் "சென்னை." ஏன்னு தெரியனுமா? ஒரு கொசுவத்தி சுத்தனும்

காலேஜ் முடிச்சுட்டு அனிமேசன் கோர்ஸ் படிக்க சென்னை வந்தேன், என்னுடன் ஸ்கூலில் படிச்ச நண்பன் அவன் ரூமில் தங்கிக்கலாம் என்றான், வந்து கிண்டியில் இறங்கியதும் வந்து வேளச்சேரியில் இருக்கும் அவனுடைய ரூமுக்கு அழைச்சுக்கிட்டு போனான், சின்ன அறைதான் 4 பேர் இருந்தார்கள். காலையில் எழுந்து குளிக்க போனேன் போய் பைப்பை திறந்தால் தண்ணி வரல, பக்கத்தில் ஒரு நீல கலர் ட்ரம், அதில் தண்ணி இருந்துச்சு எடுத்து பக்கெட்டில் ஊத்தி குளிச்சிட்டு ஜட்டி பனியனை அலசலாம் என்றால் தண்ணி இல்ல, பாத்ரூம் வெளியே ஒரு ட்ரம் தண்ணி இருந்துச்சு அதில் இருந்து தண்ணி எடுத்து ஊத்தி ஜட்டி பனியன் அலசிட்டு வந்தேன், கொஞ்ச நேரத்தில் நண்பன் குளிக்க போனவன் சுவத்தில் அடிச்ச பந்து போல திரும்பி வந்தான், என்னாடா மாப்பு குளிக்க போறேன்னுட்டு உடனே வந்துட்டேன்னு கேட்டேன்.

டேய் ட்ரம்மில் இருந்த தண்ணி எங்கடா என்றான்? குளிச்சுட்டேன் டா என்றேன். என்னமோ அவனோட பிகரை ஆட்டைய போட்ட மாதிரி என்னது குளிச்சுட்டீயா என்றான் அதிர்சியாக, ஆமான்டா பைப்பில் தண்ணி வரல அதான் அங்கிருந்துச்சு ஊத்தி குளிச்சுட்டேன் என்றேன், அவ்வளோ தண்ணியிலுமா என்றான் ரொம்ப அதிர்ச்சியாக. என்ன டா இவ்வளோ ஷாக் ஆவுற, பனியன் ஜட்டி அலச தண்ணி இல்லாம வெளியில் இருந்த ட்ரம்மில் இருந்து ரெண்டு குடம் எடுத்து அலசினேன் என்றேன். ங்கொயாலே பனியன் ஜட்டி அலச ரெண்டு குடமா? அதுவும் ஹவுஸ் ஓனர் வீட்டு ட்ரமில் இருந்து, டேய் வந்த முதல் நாளே உன் ஏழரைய ஆரம்பிச்சுட்டீயே டா, அவுங்க வீட்டு தண்ணிய எடுத்து வேற வீடு மாற வெச்சுடுவ போல, டேய் டேப்பில் தண்ணி வராது ஒருத்தருக்கு ஒரு குடம் தான் டா குளிக்க என்றான், ஹவுஸ் ஓனரிடம் போய் பையன் புதுசு தெரியாம எடுத்துட்டான் திரும்பி நாளைக்கு தந்துடுறோம் என்று சொல்லி சமாளிச்சுட்டு வந்தான்.

எங்க ஊரில் வீட்டுக்கு அருகிலேயே விவசாயத்துக்கு உள்ள எங்க போர் செட், அந்த தொட்டி ஒரு 5 அடி நீளமும் ஒரு 4 அடி ஆழமும் இருக்கும், அதில் போய் குளிச்சோம் என்றால் சும்மா அருவியில் குளிச்ச மாதிரி ஒரு பீளிங் கிடைக்கும், ஒரு மணி நேரம் ஊறிட்டு, அம்மா பாரேன் நான் சிகப்பாயிட்டேன் என்றால், அம்மா அதுக்கு எறுமை மாடு கூட ஒரு மணி நேரம் ஊறினா வெளுத்துதான் போகும் என்று சொல்லும்.அப்படி இருந்த என்னை ஒரு குடத்து தண்ணியில் அடைக்க பார்த்தது சென்னை. அதைவிட கொடுமை தண்ணீர் பிடிச்சு வைக்கும் ஆள் வரவில்லை என்றால் குடத்தை வெச்சு தண்ணி புடிக்கனும் அது அதைவிட கொடுமை.

ஒரு குடத்தில் காக்கா குடிக்க தான் கல்லை போட்டுச்சு அதில் ஒரு நியாயம் இருந்துச்சு ஆனா என்னை குடத்தில் கல்லை போட்டு மேலே வரும் தண்ணியில் குளிடான்னா அது எந்த விதத்தில் நியாயம்?

அதைவிட கொடுமை பஸ், எந்த ஊருக்கு போனாலும் ஜன்னல் ஓர சீட்டுக்கு கர்சிப் போடுவோம் ஆனா சென்னை வந்தப்ப பஸ்ஸில் போனா எல்லோரும் இந்த பக்கம் உட்காந்துக்கிட்டு ஜன்னல் ஓர சீட் கொடுத்தார்கள் அட பார்றா இவ்வளோ நல்லவனுங்களா இருக்கானுங்க என்று ஆரம்பத்தில் நினைச்சேன், அப்புறம் தான் தெரிஞ்சுது அது பக்கத்து பஸ் கார் விடும் புகையில் இருந்து தப்பிக்க என்று, நாமளே ஏற்கனவே ஜப்பான் பிளாக் கலர் அதை மேலும் மெரூகூட்டியது சென்னை காற்று:) ஆழ்வார்பேட்டையில் இருக்கும் இமேஜ் செண்டருக்கு 45A பஸ்ஸை புடிச்சா மொத்த சென்னையும் அதில் இருக்கிற மாதிரி கூட்டம் நிரம்பி வழியும், இறங்கும் பொழுது அயர்ன் செஞ்சு போட்டுக்கிட்டு போன சட்டை அப்படியே கசங்கி பழய துணி போல் இருக்கும்.

அப்புறம் மழை பேஞ்சா கேட்கவே வேண்டாம்...

சென்னையை பற்றி புகழ்ந்தால் அனுஜன்யாவுக்கு ரொம்ப பிடிக்கும் என்று கேள்வி பட்டேன் அதான் அவருக்காக இந்த ஸ்பெசல் பதிவு:)))

Wednesday, August 19, 2009

கார்ட்டூன்ஸ் 20-08-2009








Tuesday, August 18, 2009

ஜலபுல ஜலபுல கும்தலக்கா ஊஹா ஊஹா!!!


யார் யாரிடமோ உன்
சாயல்களைப் பார்த்தபடி
வீடு வந்து சேர்ந்தேன்..
வீட்டிலிருந்த நீ
யாரோவாகியிருந்தாய். இது கவிதாயினியின் கவிதை

யார் யாரிடமோ
சில்லரை கேட்டபடி
வீடு வந்தேன்,
வீட்டிலிருந்த நீ
நீ கை நிறைய
சில்லரையோடு இருந்தாய்---ராபிச்சை


***********************

இனி கவிஞர் ஆதிமூலகிருஷ்ணன் கவிதைகள் கருப்பில் இருப்பவை!

ஒரு மத்தாப்பூவைப்போல
நீ செல்லுமிடமெல்லாம்
சிதறிக்கொண்டிருக்கிறது
அழகு.!



உலர்ந்து விழும் சுண்ணாம்பை போல
நீ போகுமிடம் எல்லாம்
விழுந்துக்கொண்டிருக்கிறது
நீ முகத்தில் பூசிய பவுடர்!


***********************

காதலின் அழகு உன் முகமென்றால்
காமத்தின் அழகு உன் இதழ்கள்
அதற்குத் தருவதற்காகவும்
இதற்குத் தருவதற்காகவும்
அழகை
தனித்தனியே சேமித்துவைத்திருக்கிறாய்

மயக்கத்துக்கு உன் முகம்
பரலோகத்துக்கு உன் வாய்
இப்படி இம்சிக்கவும்
அப்படி கொல்லவும்
அழுக்கை
குளிக்காமல் சேமித்துவைத்திருக்கிறாய்


**********

உன் அழகு
ஒரு விடியலைப்போல
புலர்ந்துகொண்டேயிருக்கிறது
நான்
ஒரு அதிகாலைப்பறவைபோல
பறந்துகொண்டேயிருக்கிறேன்


உன் அழுக்கு துணிகள்
ஒரு மலைப்போல்
குவிந்துகொண்டேயிருக்கிறது
நான்
ஒரு கல்லால் அடிவாங்கிய நாயைபோல
தலைதெறிக்க ஓடிக்கொண்டேயிருக்கிறேன்
.

**********
காலத்திலிருந்தும்
இந்தக் காற்றிலிருந்தும்
உனக்கான அழகை
சேகரித்துக்கொண்டேயிருக்கிறாய்

பூச்சு புடிச்ச கடலை மாவில் இருந்தும்
அழுகிபோன எலும்பிச்சை பழத்திலிருந்தும்
உன்னை அழகாக்க
முயற்சி செய்துக்கொண்டேயிருக்கிறாய்
முடியாது என்று தெரிந்தும்
எப்பொழுதும் போல் வாய் மூடி நான்!

எல்லோரும் வில்லன்கள் தான்!

பொம்மையை பங்கு போட
புதிதாய் வரும்
தம்பி ”பாப்பா”


மூங்கில் பிரம்போடு
எப்பொழுதும்
உலாவரும் கணக்கு
”வாத்தியார்”

சைட் அடிக்கும் பெண்ணுக்கு
பாடிகாட் மூனீஸ்வர் மீசையோடு
அவ கூடவரும் ”அப்பா”


பீர் அடிச்சு வீட்டுக்கு
வரும் பொழுது
வீட்டுக்கு அருகில் வந்ததும்
வரும் ”வாமிட்”

எண்ணெயில் போட்டு எடுத்த கத்திரிக்காய்
மாதிரி வேர்த்து வழிய போகும் இண்டர்வியுக்கு
பிரிஜில் இருந்து எடுத்த தக்காளி மாதிரி
ப்ரஸா வரும் மாடன் ”பொண்ணு”

புது மனைவிக்கு முத்தம் கொடுக்க
ஆசையோடு நெருக்கும் பொழுது
ஓடி வந்து ரூமில் ஒளியும் ”குட்டீஸ்”

மல்லிகை பூ அல்வாவோடு
வீட்டுக்கு வரும் பொழுது
மூட்டை முடிச்சோடு
வீட்டில் டேரா போட
வந்திருக்கும் ”விருந்தாளிகள்”

மனைவி பிறந்த நாளுக்கு
புடவை எடுத்து கொடுக்க
கடைக்கு போகும் பொழுது
காஸ்ட்லி புடவையை மட்டும்
எடுத்து போடும் ”சேல்ஸ் மேன்”

முதல் மூன்று மாசம்
கடைசி மூன்று மாசம்
பிறகு இரண்டு மாசம்
என்று எல்லாம் முடிஞ்சு ஆசையோடு
மனைவி அருகில் போகும் பொழுது
பாலுக்கு அழும் கை ”குழந்தை”

தியேட்டரில் தனியாய் உட்காந்திருக்கும்
நேரம் “பாஸ் கொஞ்சம் கொஞ்சம் பின்னாடி அங்க உட்கார
முடியுமா நாங்க பிரண்ட்ஸா வந்திருக்கோம்?”
என்று நாலஞ்சு பிகரோட வந்து கேட்கும் ”அவன்”

பலான படம் பார்க்க போய்
இருக்கும் பொழுது
பிட்டு போடும் நேரம்
ரெய்ட் வரும் ”போலீஸ்”


கூட்டத்தில் முண்டி அடிச்சு கைய வுட்டு
ரெண்டு டிக்கெட் என்று கேட்கும் பொழுது
ஹவுஸ் புல் என்று போர்ட் மாட்டும்
”கவுண்டர் ஆள்”

சைட் அடிக்கும் பிகர் ஏறிய பஸ்ஸில்
ஏறி ரூட் விடும் பொழுது சில்லரை
இல்லை இறங்குன்னு
இறக்கிவிடும் ”கண்டெக்டர்”


லோன் போட்டு புதுசா வாங்கிய
பைக்கை ஓட்டி பழக
கேட்கும் ”மச்சினன்”

நடுராத்திரி போன்
போட்டு தூங்கிட்டியா
மாப்பிள்ளைன்னு மப்பில் அனத்தும் ”நண்பன்”

பக்கத்து தெரு ஆயா வூட்டு
அட்ரஸையும்
சூப்பர் பிகர் பீட்டரா
கேட்கும் பொழுது ”இங்கிலீஸ்”

பிகரை பின்னாடி இருந்து
பார்த்துவிட்டு சைக்கிளில்
துரத்தி கிட்டக்க போகும்
பொழுது சடார் என்று கழண்டு
போகும் சைக்கிள் ”செயின்”

புதுசா குடிவந்த பெண்ணை
சைட் அடிச்சுக்கிட்டு இருக்கும் பொழுது
அதோட பிறந்தநாளுக்கு ‘அண்ணனுக்கு”
சாக்லெட் கொடும்மா
என்று சொல்லும் வீட்டு ”பெருசு”

கையில் காசு இல்லாமல்
நண்பர்களோடு
சாப்பிட போகும் பொழுது
கரெக்டா பில்லை நம்மிடம்
கொடுக்கும் ”சர்வர்”

டிஸ்கி: ஒன்றன் கீழ் ஒன்று இருப்பதால் கவிதையாக நினைச்சு விடவேண்டாம் அலைன்மெண்ட் பிராபிளம்!

Wednesday, August 12, 2009

உதவிடுவோம் சக பிளாக்கருக்கு...

சக பிளாக்கர் இதை தவிர வேறு அறிமுகம் ஏதும் தேவை இல்லை, நம் பிராத்தனைகளும்,சிறு உதவியும் அவரை உயிர் பிழைக்க வைக்கும்.


கே வி ஆர் பதிவினை இங்கு கொடுத்து இருக்கிறேன் முடிந்தவர்கள் உதவிடுங்கள்.

சக பதிவரும் சிங்கப்பூரில் வசிக்கும் எனது கல்லூரி நண்பருமான திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது.


ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ICICI Account Details


Account Number: 612801076559


Name: M.KARUNANITHI


Branch: Tanjore


Singapore Account Details


Account Number: 130-42549-6


Name: Muthaiyan Karunanithi


Bank: DBS - POSB Savings


பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.


மேலதிக விபரம் வேண்டுபவர்கள் என்னையோ அல்லது எனது நண்பர் கருணாநிதியையோ தொடர்புகொள்ளலாம்


எனது செல்பேசி எண்: +966 508296293


கருணாநிதி செல்பேசி எண்: +65 93856261


சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளேன்.


Hi Friends, This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment.


Thanks

Regards,


Santhi Senthil Nathan.


Wednesday, August 5, 2009

ட்விட்டர் அப்படின்னா???

கொஞ்ச நாளைக்கு முன்னாடி எல்லா ”பிரபல பதிவருங்க” பிளாக்கின் சைட் பாரில் நான் ட்விட்டுறேன் நீ ட்விட்டுறியா? என்னோடு ட்விட்ட, என்னோடு நொட்டன்னு ஏகப்பட்ட விளம்பரங்கள் சரி என்ன கருமாந்திரமோ இருந்துட்டு போவுட்டும் நமக்கு எதுக்கு அதெல்லாம் இங்க ஒரு கடைக்கே ஆள் சேர்க்கமுடியல இதுல எதுக்கு ட்விட்டு அது இதுன்னு எதுக்குன்னு பேசாம இருந்துட்டேன்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆயகலைகள் அனைத்தையும் கரைச்சு குடிச்சவரான அன்பு குருஜி சுந்தரும் ஒரு பதிவில் எனக்கு ட்விட்டர்
புரியவில்லை அல்லது பிடிக்கவில்லை என்று சொல்லி வேறு ஏதோ சொல்லப்போக சுரேஷ்கண்ணனுக்கும் அவருக்கும் சண்டை வந்தது.
என்னடா என் குருஜிக்கு வந்த சோதனை என்றும் நான் யோசித்துக்கொண்டு இருந்தபொழுது என் அறை நண்பர் சிவராமன் எப்பொழுதும் ட்விட்டுவார் , ட்விட்டரை பற்றி அடிக்கடி பேசுவார் சில பதிவுலக ஜாம்பாவான்கள் கூட அங்க சோபிக்கமுடியவில்லை என்றும் சொன்னார் அட நமக்கு எதுக்கு வம்பு என்று இருந்துவிட்டேன்.

திடிர் என்று ஒரு நாள் ஞானோதயம் வர அப்படி என்னதான் அதில் இருக்குன்னு பார்க்கலாம் என்று ஒரு யூசர் நேம் ஐடி கிரியேட் செஞ்சு பார்த்தேன் ஒன்னும் பிடிபடல அப்படியே விட்டுவிட்டேன், அப்புறம் பாலோயர்ஸ் சேர சேர என்னடா இது என்று எட்டிபார்க்க ஆரம்பிச்சேன் கொஞ்சம் கொஞ்சமாக சிவராமன் , புரூனோ, இளா எல்லாம் சொல்லி கொடுத்தாங்க புரிஞ்சுது அதான் உங்களுக்கு விளக்கமாக சொல்லலாமேன்னு இந்த பதிவு.

ஸ்கூல் படிக்கும் பொழுது ஒரு பாராகிராப் கொடுத்துட்டு அதை சுருக்கி அர்த்தம் மாறாமல் ஒரு 4 வரியில் எழுத சொல்வார்கள். அதுபோல் ஒரு சம்பவம் சொல்லி அதை டெலிகிராபிக் மெசேஜ்ஜாக எழுத சொல்வார்கள்

உதாரணத்துக்கு திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் புதுக்குடி கிராமத்தை சேர்ந்த குவாட்டர் கோவிந்தனின் மனைவியான பரமேஸ்வரி வயது 68 இன்று காலை எழுந்து தண்ணீர் பிடிக்க பைப்படிக்கு சென்ற பொழுது கால் வழுக்கி கீழே விழுந்து மண்டை உடைந்து கபால மோட்சம் அடைந்தார். என்ற செய்தியை டெலிகிராபிக் மெசேஜ்ஜாக எப்படி சொல்வது?


”குவாட்டர் கோவிந்தன் மனைவி பரமேஸ்வரி ”கோ”யிந்தா கோயிந்தா” ஸ்டார்ட் இமிடியட்லி


இவ்வளோ தான் இது எழுத தெரிஞ்சால் போதும் நீங்கள் ட்விட்டராக ஆகலாம்! ஏன் இப்படி என்றால் அங்க அதிகபட்சமாக 140 எழுத்துக்கள் தான் டைப் செய்ய முடியும்!

நாம எல்லாம் குறும்படத்தையே 1 மணி நேரம் எடுக்கும் ஆட்களை வெச்சு இருக்கிறோம், சிலர் எழுதும் பதிவை ஸ்குரோல் செஞ்சு பார்க்கவே 5 நிமிடம் ஆவுது(படிக்க இல்லை), இவர்களை எல்லாம் வெச்சுக்கிட்டு எப்படி ட்விட்டுவது என்று கேள்வி கேட்டால் பதில் என்னிடம் இல்லை:)

அப்புறம் என்னத்த ட்விட்டுவது?

எதை பற்றி வேண்டும் என்றாலும் ட்விட்டலாம் இதுதான் என்று வரைமுறை இல்லை

எடுத்துகாட்டாக

காலையில் எழுந்து ஆபிஸ் வந்தேன் பஸ்ஸில் கூட்டம் அதிகம்! இது ஒரு ட்விட்டர் மெசேஜாக போடலாம்

பாலோயர்ஸ் அதிகமாக இருந்தால் அச்சிச்சோ அது என்ன பஸ் என்று கேள்வி கேட்பார்கள்?

நீங்களும் அது 47A எப்பொழுதும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று சொல்லலாம்!

அவரும் கூட்டம் அதிகமாக இருக்கா ஏன் அரசு அதிக பஸ் விடவில்லையா என்பார்

நீங்களும் எத்தனை பஸ் இருந்தாலும் பத்தாது என்று சொல்லலாம்.

இப்படியே மாறி மாறி ட்விட்டலாம்.

என்னது? இத பேச எதுக்கு ட்விட்டனும் சாட் விண்டோவில் பேசிக்கலாமேன்னு கேட்டால் எனக்கு பதில் சொல்லதெரியாதுங்கோ!

நாலு பேரு பாலோயரா ஆவனும் என்றால்

நேற்று மன்மோகன் சிங் பேசிய அபத்தமான பேச்சு லிங் என்று அந்த செய்தி வந்த பக்கதுக்கு லிங் கொடுக்கனும். (மன் மோகன் பேச்சுன்னாலே அபத்தமாக இருக்கும் என்பது தெரிஞ்சதுதான் இருந்தாலும் லிங் கொடுக்கனும்),

லாலு பேசிய பேச்சுக்கு லிங் என்று லிங் கொடுக்கனும் (முக்கியமாக இவை எல்லாம் ஆங்கிலத்தில் இருப்பது நல்லது, அப்பொழுதுதான் ஒரு கெத்து கிடைக்கும்) நீங்க பாட்டுக்கு தினதந்திக்கு எல்லாம் லிங் கொடுத்தால் ஒன்னும் சொல்வதுக்கு இல்லை:)


இது என்னடா வம்பா போச்சு இப்படி படிச்சுதான் அதுக்கு லிங் கொடுக்கனுமா? அதெல்லாம் சரி வராது நான் தருமி பரம்பரை என்றாலும் ஒன்னும் பிரச்சினை இல்லை நீங்க கேள்வி கேட்கலாம். எதை பற்றி?

சுண்டைகாய் பொறியல் செய்முறை லிங் கிடைக்குமா?

மனைவி செய்யும் சாம்பாரின் ருசியை மாற்றுவது எப்படி?

ராக்கமா கைய தட்டு பாட்டு எங்கு டவுன் லோட் செய்யலாம்? இப்படி எல்லாம் தோன்றியதை கேட்கலாம்!

அப்புறம் முக்கியமான விசயம் நீங்க நாலு பேருக்கு பாலோயரா ஆவனும்
அப்படி ஆனா அவுங்க ட்விட்டுவது உங்க பேஜில் வரும் யார் யாரை பாலோயரா ஆக்கலாம் யார் யார் எப்படி எப்படி?

அங்கு நம்ம கேள்வி நாயகன் புருனோ வழக்கம் போல் புள்ளிவிவரங்களுக்கான லிங்கோடு ட்விட்டுவார். சமீபத்தில் விமான ஸ்ட்ரைக் பற்றி இவரும் பத்ரியும் காரசாரவிவதாம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க, நீ என்னா செஞ்சேன்னு கேட்குறீங்களா? இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலைன்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். புள்ளி விவரங்கள், செய்திகள் வேண்டும் என்றால் இவர்களுக்கு பாலோயரா ஆவனும்...என்ன இளையராஜாவை பற்றி மட்டும் பேசாம இருக்கனும் புருனோவிடம்:)

அப்புறம் எழுத்துலக ஜாம்பாவான்கள் பா.ரா இருக்காக, சொக்கன் இருக்காக, எப்பவும் சீரியசாகவே பேசும் ஐகரன்பிரகாஸ், பாஸ்டன் பாலா, அன்புடன் பாலா இவுங்க எல்லாம் இருக்காக.


வில்லங்கமான டாப்பிக் ஆள் வேண்டும் என்றால் TBCD

கவிமடதளபதி பினாத்தலார்

அப்புறம் ஜாலியான்னா ஆளா வேண்டும் என்றால் இலவச கொத்தனார், கானா பிரபா

மொக்கையாக என்றால் அதிஷா, நான்:) இப்படி பலர் இருக்காங்க அப்ப அப்ப அய்யனார் நான் வெச்ச மீன் குழம்பை சாப்பிட வருகிறீர்களா என்று தலைய காட்டுவார் இப்பதான் ஜ்வோராம் சுந்தர், பைத்தியகாரன் எல்லாம் சேர்ந்து இருக்காங்க இவர்கள் எல்லாம் சீக்கிரம் பார்ம்க்கு வரும் முன்பே சேர்ந்துவிடுவது நல்லது.

தத்துவம்: நீயும் பிரண்டும் டைப்பினா அது சாட்டு, நீ மட்டும் டைப்பினா அது ட்விட்டு!

டிஸ்கி: சுரேஷ்கண்ணனுக்கு போட்டியாக பிளாக் ஆரம்பித்தேன் என்று அண்ணாச்சி போன சந்திப்பில் சொன்னார், (அவருக்காக இந்த டிஸ்கி) சுரேஷ்கண்ணன் ட்விட்டரிலும் ட்விட்டுகிறார் சீக்கிரம் வாங்க அண்ணாச்சி!

Monday, August 3, 2009

குடநாட்டு எஸ்டேட் ஓய்வும் ஒரு காமெடியும்!

குடநாட்டு எஸ்டேட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் பயலலிதாவும், குஷிகலாவும்.


அங்கு பதறியடித்துக்கொண்டு ஓடிவருகிறார் வெண்ணீர்செல்வம். அவர் பின்னாடியே பங்கோட்டையன்,எல்லாம் ஓடி வருகிறார்கள்.

வெண்ணீர்செல்வம் குஷிகலாவிடம் மேடத்தை பார்க்கனும் என்கிறார்.

குஷிகலா: மேடம் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர் ஆகி ரெஸ்ட் எடுக்கிறாங்க இப்ப அவங்களை டிஸ்டர்ப் செஞ்சா ரொம்ப கோவப்படுவாங்க அவுங்க கண் முழிச்சு யாரை பார்க்கிறாங்களோ அவுங்களுக்கு பீஸ் புடுங்கிடுவாங்க.

வெண்ணீர்செல்வம்: மனசுக்குள் (ஒருநாள் கூட உங்க முகத்தில் முழிக்கலையா)

பரவாயில்லை சின்னமேடம் நாங்க வெயிட் பண்ணுறோம், மேடம் வரப்ப வரட்டும். என்று காலை போனவர்கள் மதியம் வரை காத்திருக்கிறார்கள் மதியம் சாப்பிட எழுந்தவரிடம், குஷிகலா இதுபோல் வந்து இருக்காங்க என்றதும் எதுக்கு பர்மிசன் இல்லாம இவங்களை எல்லாம் உள்ளே விட்ட!

பயலலிதா:என்ன இப்ப தலைபோற காரியம் எதா இருந்தாலும் ரெண்டு மாசம் வெய்யில் எல்லாம் குறையவிட்டு பார்த்துக்கலாம்.

குஷிகலா: இல்ல மேடம் என்னான்னு சும்மா கேட்டுக்கிட்டு அனுப்பிடுங்க...என்று சொல்லி சமாதானபடுத்தி அழைத்து வருகிறார் குஷிகலா.

மேடத்தை பார்த்ததும் எல்லாம் ஒரு நாலு அடி உயரம் கம்மி ஆகி பம்மி நிற்கிறார்கள், மேடம் வந்ததும் வெண்ணீர் செல்வம் ஏதோ சொல்ல ஆரம்பிக்கிறார்..

குஷிகலா: இருங்க வெண்ணீர் ஏன் இவ்வளோ அவசரப்படுறீங்க, இப்பதான் மேடம் அங்கிருந்து நடந்து வந்திருக்காங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.அப்புறம் சேதிய சொல்லுங்க.

ஒரு பத்து நிமிடம் கழிச்சு ம்ம்ம் என்று பயலலிதா சொன்னதும்..

வெண்ணீர்செல்வம்: (ஸ்கூலில் ஒன்னாம் வாய்பாடு ஒப்பிக்கும் மாணவன் போல் எழுந்து கை கட்டி நின்று )மேடம் மேடம் இந்த தேர்தல் கமிசன் நம்மை கேட்காம திடிர் என்று 5 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிச்சுட்டாங்க,நாம கூட்டணி தலைவர்கள் கூட பேசி முடிவெடுத்து அவுங்களுக்கு எந்த தொகுதின்னு பங்கீடு முடிவுசெ .........

பயலலிதா முறைக்க

இல்ல இல்ல நாம முடிவெடுத்து கூட்டணி தலைவர்கள் கிட்ட இவுங்கதான் உங்க கட்சி வேட்பாளர் என்று சொல்லிடலாம், அதுதானே நம்ம வழக்கம். எப்பொழுதும் போல பைகோவும், கோமதாஸும் ஒன்னும் சொல்லாம வாங்கிப்பாங்க. ஆளும் கட்சிக்கு நாம யாருன்னு காட்டனும்.

குஷிகலா: வெண்ணீர் மைனாரிட்டிய விட்டுவிட்டிங்க

வெண்ணீர்: ஆளும் மைனாரிட்டி அரசுக்கு நாம யாருன்னு காட்டனும் என்று திருத்தி சொல்கிறார்

பயலலிதா: வாட்? திரும்ப தேர்தல்? என்ன மேன் இப்பதானே இரண்டு மாசம் முன்னாடி தேர்தல் பிரச்சாரம் எல்லாம் ஹெலிகாப்டரில் பறந்து பறந்து செஞ்சு, ஹெலிபேடில் இருந்து மேடைக்கு நடந்து எல்லாம் போய் ரொம்ப டயர்டா இருக்கேன் இப்ப திரும்ப தேர்தலா? என்னால திரும்ப இந்த வெய்யிலில் எல்லாம் பிரச்சாரம் செய்ய முடியாது..

பங்கோட்டையன்: ஆமாம் மேடம் , இந்த தேர்தல் கமிசன் சரி இல்லை நம்ம கிட்ட ஒரு வார்த்தையும் கேட்க மாட்டேங்கிறாங்க, நாம ஆட்சிக்கு வந்ததும் இவுங்க பவரை புடுங்கனும்.

வெண்ணீர்: மேடம் வரவர நம்ம கட்சி எம்.எல்.ஏ எண்ணிக்கை குறைஞ்சுக்கிட்டே வருது ஏதாச்சும் செய்யனும்...


பயலலிதா: என்னமேன் இந்த 5 சீட் ஜெயிச்சா நான் என்ன திரும்ப சி.எம் ஆக முடியுமா? இல்லீல்ல அப்புறம் எதுக்கு அலட்டிக்கனும் பேசாம தேர்தலை புறக்கனிச்சுடலாம்...


வெண்ணீர்: சரிங்க மேடம் அப்ப அப்படியே பைகோ,கோமதாஸ் இவங்களுக்கும் போன் போட்டு சொல்லிடவா?

பயலலிதா: தேவை இல்லாம எதுக்கு மேன் ரெண்டு கால் வேஸ்ட் பன்னுற பேப்பரில் நியுஸ் கொடுத்துடுங்க அத பார்த்து தெரிஞ்சுக்கிட்டும்.


வெண்ணீர்: சரிங்க மேடம்

Sunday, August 2, 2009

டட்டா டட்டா டட்டா ச்சூ ச்சூமாரி ச்சூ மாரி

டட்டா டட்டா டட்டா ச்சூ ச்சூமாரி ச்சூ மாரி ஸ்கூலில் படித்ததை நினைக்கும் பொழுதே ஒரு சிறு புன்னகை வருகிறது, எத்தனை இனிமையான காலங்கள்.எங்கள் ஊரில் இருக்கும் சுத்துவட்டராத்துக்கும் அல்லது பதினெட்டு பட்டிக்கும் ஒரே ஸ்கூல் சுவாமி தயானந்தா மேல் நிலைப்பள்ளி சுருக்கமாக சு.த.மே.நி.பள்ளி சுற்றிலும் இருக்கும் கிராம மக்கள், ஏழை குடும்பங்களின் குழந்தைகளுக்குதரமான கல்வி இலவசமாக வழங்கி வருகிறது.

ஒன்னாவது முதல் ஐந்தாவது வரை கீத்து கொட்டகைதான் அதன் பிறகு 6 வது முதல் ஒட்டு கட்டிடம் அதனால் எப்படா அந்த கிளாசுக்கு போவோம் என்று இருக்கும். கரு நீலகலர் டவுசர், வெள்ளை கலர் சட்டை இதுதான் எங்க சீருடை,ஆனால் எப்பொழுதும் அது வெள்ளை கலராக திரும்பி போனது இல்லை, சர்ப் எக்சலுக்கு வரும் விளம்பரத்தில் சிறுவன் மழை சேறு எல்லாம் அப்பி போவது போல் அது எப்பொழுதும் ஒரு வித காக்கி கலரில் தான் இருக்கும்.

காலையில் பள்ளிக்கூடத்துக்கு போவதும் திரும்ப வருவதுமே ஒரு ஜாலிதான் கொஞ்ச நாள் வரை ஆள் வைத்து சைக்கிளில் விட்டு வர செய்தவர்கள் இனி தேவை இல்லை இது ஊரை வித்துட்டு வந்துடும் என்பதாலோ என்னவோ கொஞ்ச நாட்களில் நிறுத்திவிட்டார்கள், அதனால் என்ன நடராஜாதான், ஜிப் வெச்ச ஜோல்னா பையை முதலில் முன்பக்கமாக கழுத்தில் தொங்கவிட்டு அதன் இரு பக்கத்தையும் கைகளுக்கு இடையில் அழுத்தி பிடிச்சுக்கிட்டு பையே அப்படியே பின்னாடி கழுத்து வழியா போட்டால் ஷோல்டர் பேக் மாதிரி ஆயிடும் அதுமாதிரி போட்டுக்கிட்டு போவோம் நடையில் ஒரு அலட்சியம் ஒரு ஸ்டைல் இருக்கும் அவை பெரும்பாலும் ரஜினியை இமிடேட் செய்வது போல் இருக்கும், சில சமயம் அந்த வழியாக வரும் மாட்டு வண்டியில் பைய மாட்டிவிட்டு அந்த வண்டி பின்னாடி வவ்வால் மாதிரி தொங்கிக்கிட்டு வருவோம்.

பள்ளிகூடத்தில் பேசிய பேச்சுக்கள்
டேய் நீ உட்டியாடா? இல்லடா, நீ உட்டியா?இல்லடா டேய் நீ உட்டியா?இப்படி ஒரு விசாரனை போகும், எவனும் ஒத்துக்கமாட்டானுங்கஇங்க வாங்கடா இப்ப பாரு கண்டுபிடிக்கிறேன் வட்டமா நில்லுங்கடான்னு நிக்க வெச்சு வரிசையா இப்படி சொல்லனும் ”ஆடு, மாடு, பசு,குசு” அவ்வ் என்னிடமே முடியும், இல்ல இல்ல திரும்ப கடைசியா ஒரு தடவை என்று இந்த முறை உசாரா அடுத்தவனிடம் இருந்து திரும்ப ஆரம்பிக்கும் ”ஆடு, மாடு, பசு, குசு” டேய் நீதான் டா விட்டவன் என்று யாரையோ ஒருவனை குற்றவாளி கூண்டில் ஏற்றிவிட்டு அடுத்த வேலைய பார்க்க போய்விடுவோம், லேசா சத்தம் மட்டும் வந்து இவன் தான் என்று தெரிஞ்சிடிச்சிஅவன் அவ்வளோதான் காலி அடுத்த ஒருவன் என்னைக்கு இவனை விட கொஞ்சம் சத்தமாக விட்டு மாட்டுறானோ அதுவரை அவன் பெயர் குசுவண்டி அல்லது குசுவுனி!

யாராவது மொட்டை போட்டுக்கிட்டு வந்துட்டா இந்த ரைம்ஸ் கண்டிப்பா இருக்கும்
“மொட்டையும் மொட்டையும்
சேர்ந்துக்கிச்சாம்
முருங்க மரத்துல ஏறிக்கிச்சாம்
கட்டெறும்பு கடிச்சிச்சாம்
வால் வால்ன்னு கத்துச்சாம்”

அதுபோல் எவனாவது டூ விட்டால் போடா இவரு பேசலைன்னா எங்க ஊட்டு கோழி முட்டைவுடாது பாரு போடா! அதுபோல் அடுத்த வார்த்தை ”டேய் அன்னைக்கு நான் வாங்கி கொடுத்த முறுக்கு, ஐஸ் எல்லாம் வாங்கி கொடுடா, சூடு சொரனை வெட்கம் மானம் இருந்தா எல்லாம் இப்ப வந்தாவனும்.”

”டூ டூ டுப்பாக்கி
போலீஸ் காரன் பொண்டாட்டி
சவுக்கார கட்டி
கொண்டுவாடி ரொட்டி” இது டூ விடும் பொழுது பாடப்படும் ரைம்ஸ்.

டூ விட்டவனோடு எவனும் சேரக்கூடாது டேய் அவன் என் கூட சண்டை இனி அவன் கிட்ட பேசுனா என்கிட்ட பேசாத! நீ என் ஆளா அவன் ஆளா? இப்படி கட்சி பிரிப்பது என்று ஜாலியாக இருக்கும்.

எவனாவது விளையாட்டில் தோற்றுவிட்டால்
”தோத்தாங்குளி டோய்
தோத்தாங்குளி டோய்
தோத்தாங்குளி தொட நடுங்கி
எறுமை மாட்டு மயிர் புடுங்கி” இப்படி ஒரு ரைம்ஸ்

சிலேட்டு குச்சி, பேனா கானும் என்றால் டேய் எடுத்தவன் கொடுத்துடுங்க இல்ல இப்ப வீட்டப்பத்தி கன்னாபின்னான்னு திட்டப்போறேன் என்றதும் வரும், அதுபோல் என்ன டா நீ எடுத்தியா என்று கேட்டா இல்ல வேணும்னா நீ எடுத்தவனை திட்டிக்க என்பார்கள்.

ஏப்ரல் ஒன்னாம் தேதி யாரு சட்டையிலாவது மை, காக்கா பீன்னு சொல்லி ஏமாற்றி விட்டு ஏமாந்தியா ஏப்ரல் ஃபூல் என்று கோரஸ் பாடுவது, எவன் மேலயாவாது காக்கா ஆய் போய்ட்டுன்னா மற்றவர்கள் கொடுக்கு வெச்சுக்கனும் இப்படி சின்ன சின்ன சேட்டைகள் நிறைந்தது பள்ளி நினைவுகள்.

தொடர் எழுத அழைத்த கலையரசனுக்கு நன்றி! மேலும் ஸ்கூல் சேட்டைகள் பற்றி முன்பு எழுதியது ஜாலியாக இருக்கும்

http://kusumbuonly.blogspot.com/2009/04/blog-post.html

http://kusumbuonly.blogspot.com/2007/11/blog-post_11.html

நானே மிகவும் தாமதமாக விளையாட்டில் பங்கெடுப்பதாலும், நண்பர்கள் பலர் தொடர்விளையாட்டால் டயர்ட் ஆகி இருப்பதாலும் நான் யாரையும் கூப்பிடவில்லை! மன்னிக்கவும்!